கதிர்காம முருகனின் திருவிழாக்கோலம் இன்று தொடங்குகின்றது இலங்கை வாழ் மக்களில் 90 வீதமானோர் சென்றிருக்கக்கூடிய அனைவரும் அறிந்திருக்கக்கூடிய இடமே கதிர்காமம். இன, மத, மொழி வேறுபாடு இன்றி இலங்கையர்கள் கதிர்காமத் திருத்தலத்திற்குச் செல்வதை வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார்கள். கதிர்காமம் யாழ்பாணத்தில் இருந்து கிட்ட தட்ட 600 கிமீ தூரத்தில் உள்ளது. உடவளவை தேசியப் பூங்கா கதிர்காமத்திற்குச் செல்லும் வழியில் கொழும்பிலிருந்து 200 கி.மீ தொலைவில் காணப்படுகின்றது. உலர் வலயப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பூங்காவில் நீர் வாழ் உயிரினங்கள் உள்ளடங்கலாக மான், சிறுத்தை, சிறுத்தைப் புலி, நரி, முயல், குரங்கினங்கள் போன்ற விலங்குகளையும் மயில், காட்டுக் கோழி, மைனா, கொக்கு, நாரை போன்ற சகல விதமான பறவையினங்களையும் காணமுடியும். குறிப்பாக இப்பிரதேசம் யானைகளுக்குப் பிரபல்யம் வாய்ந்தது. யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்வதை சாதாரணமாகக் கண்டு ரசிக்க முடியும். இவற்றுடன் இங்கு காணப்படும் அரிய பல மரங்களும் இப்பகுதிக்கு மேலதிக குளிர்ச்சியான அழகைக் கொடுக்கின்றன. உடவளவை நீர்த் தேக்கமும் இப்பூங்கா அமைந்துள்ள பிரதேசத்திலேயே உள்ளது. முற்று முழுதான இயற்கை வனப்பைக் கண்டு ரசிப்பதற்கு உடவளவைத் தேசியப் பூங்கா பொருத்தமான சுற்றுலாத் தலம்.
No comments:
Post a Comment